Sunday, September 20, 2009

கண்களால் காதல் செய்!


அவன் :





உன்


விழி பேசியதை


மொழி பெயர்த்தால்


கவிதை என்கிறார்கள்.




இதயத்தில் நிறைந்து


விழி வழியே


வழிகிறது


நம் காதல்!




பார்த்து பார்த்து


செய்த கண்கள் உனக்கு!


அதைப் பார்த்துக்


கொண்டிருப்பதற்காகவே


செய்த கண்கள் எனக்கு!




தினமும்


உன் வருகைக்காகக்


காத்திருக்கின்றன..


பகலில் என் கண்களும்..


இரவில் என் கனவும்..




உனக்குத் தெரியுமா?


நம் கண்களும் கூடக்


காதலிக்கின்றன!


தொட்டுக் கொள்ளாமல்


அவை ஆயிரம்


க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!


நம்மைப் போல…




திறந்தே இருப்பதால்தான்


என்செவியில் உன்வார்த்தைகள்


ஒலிக்கிறதென்றால்,


இமைகள் மூடிய பின்னும்


என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…


அது எப்படி?




என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?


எல்லாக் கணமும் உன் கண்களைப்


பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!


உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே


என் கண்களும் இமைப்பதைப் பார்!




அவள் :



போதும்…போதும்…


கவிதைகள் கொஞ்சம்


ஓய்வெடுக்கட்டும்!


நீ கண்களால் மட்டும்


காதல் செய்!

_
___***************____


தென்கச்சி பதில்கள்




கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்?

வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.

மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?

வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள் செய்தி என்ன?

நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப் போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.

மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு என்ன காரணம்?

இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு அரசு காரணமாக இருக்கிறது / அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக இருக்கிறார்கள் / இருதரப்புமே சத்தியமே. என்கிற மரத்தரையைச் சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.

உலகம் விசித்திரமானதா?

இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது. நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்! வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.

மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அபசகுணம் ஆனது?

முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும். போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும் பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய மனம் இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார். இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.


இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில் மியாவ்... மியாவ்... பூனைக்குட்டிடி என்ற சினிமாப் பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி விடுவார்.

காதலன் - கணவன் ஒப்பிடுக?

காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.
கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.
உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.
உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்வாழ்க்கை!

வாழ்வாங்கு வாழ வழி என்ன?

அருள் தந்தை வேதாத்ரி மகரிஷியின் இரண்டொழுக்கப் பண்பாட்டின்படி வாழ்வதுதான் அதற்கு வழி;


1) நான் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன்


2) பிறர் துன்பங்களைப் போக்குவேன்

விதி மதி என்ன வித்தியாசம்?

எதை சந்திக்கிறீர்களோ அது விதி!
எப்படி சந்திக்கிறீர்களோ அது மதி!

கர்வத்திற்கும் கவுரவத்திற்கும் என்ன வேறுபாடு?

கர்வம் நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்வது!
கவுரவம் அடுத்தவர்கள் நமக்காக உண்டாக்குவது!

ஆத்திகவாதி நாத்திகவாதி என்ன வித்தியாசம்?

“”நம்புங்கள், நடக்கும்!” என்பவன் ஆத்திகவாதி!
“”நடக்கட்டும், நம்புகிறோம்!” என்பவன் நாத்திகவாதி!

ஆண்களால்தான் பெண்களுக்குத் தொல்லை என்பதை ஏற்கிறீர்களா?

யாரால் யாருக்குத் தொல்லை என்பதையெல்லாம் சொல்லி வம்பில்
மாட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால்
பெர்னாட்ஷா கூறிய இரண்டு வரிகளை என்னால்
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை!
அவர் சொன்னது:
“”பெண்களால்தான் ஆண்களுக்கு நிம்மதி கிடைக்கிறது…!
பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு நிம்மதியே
தேவைப்பட்டிருக்காது!”

வெற்றிக்கு தேவை பாதி அறிவு, பாதி அதிர்ஷ்டம்,
தேர்தல் வெற்றிக்கு எது தேவை?

பணம்!

பிரச்சனைகளை எதிர்கொள்வது தானே புத்திசாலித்தனம்?

பிரச்னைகளை புரிந்து கொள்வது புத்திசாலித்தனம். முடிச்சு
போடப்பட்ட விதத்தை புரிந்து கொண்டால் அதை அவிழ்ப்பது
சுலபமாகிவிடும்

புதுக்கவிதை- மரபு கவிதை என்ன வேறுபாடு?

யாப்பு இலக்கண வரம்புக்குள் அமைவது மரபு கவிதை. அந்த வரம்பை
கடந்து வருவது புதுக்கவிதை. வலம்புரிஜான் வார்த்தைகளில்
சொல்வதென்றால்...


வார்த்தைகள் நடந்து வந்தால் அது வசனம்
நடனமாடிக்கொண்டு வந்தால் அது கவிதை
நடந்து கொண்டும், நடனமாடிக்கொண்டும் வந்தால் அது புதுக்கவிதை

அலைப்பாய்கிறது மனம்! அது அடங்க என்ன வழி?

அலையவிடுங்கள் அடங்கிவிடும்

மனதில் இருப்பதை வெளியில் சொல்பவர்கள் தாம் வெகுளியா..?

பேச வேண்டிய நேரத்தில் சும்மா இருப்பவனும் சும்மா இருக்க வேண்டிய நேரத்தில் பேசுகிறவனும் வெகுளிகள்....!

மனிதனின் பெரிய சக்திஎது?

அடக்கம் தான் மனிதனின் பெரிய சக்தி என்று பெரியவர்கள்
சொல்கிறார்கள். தனக்குள் சிறியவனாக இருக்கும் ஒருத்தன் தான்
தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள விரும்புவான். பெரிய ஆளாக
காட்டிக்கொள்ளும் முயற்சியை கைவிடுங்கள்... அப்புறம்
நீங்கள் பெரியஆளாக இருப்பீர்கள். இது ஒரு ஜென் ஞானியின்
கருத்து. இதை எடுத்து நமக்கு சொல்லியிருப்பவர் பரமஹம்ஸ
நித்யானந்தர்

நல்ல செயல்களை செய்வதற்கு நேரம் காலம் பார்ப்பது தவறு தானே?

ஒருத்தருக்கு பல்வலி. அவர் நேரம், காலம் பார்க்க கூடியவர்.
டாக்டருக்கு போன் பண்ணினார். பல்லை எடுக்க பத்து மணிக்கு
வரச்சொல்லியிருக்கீங்க டாக்டர்.... நான் 10.15 மணிக்கு தான்
வரமுடியும். அதனாலே பிரச்சனை எதுவும் இல்லையே..? ஒண்ணும்
இல்லே.... அனஸ்தீஸியா கொடுக்கறதுக்கு நேரம் இருக்காது... அவ்வளவு
தான்

ஆண்கள் முன் பெண்கள் கால்மேல் கால்போட்டுக் கொண்டு அமரலாமா?

அவரவர் காலை அவரவர் கால் மேல் போட்டுக் கொள்வதில் அடுத்தவர்களுக்கு என்ன இடைஞ்சல்?மரியாதை என்பது காலில் இருக்கிற விஷயம் இல்லை!

வயதானவர்கள் ஏன் அதிகம் கோபப்படுகிறார்கள்?

வாழ்க்கையின் உண்மைகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு வயதானாலும் கோபம் வருவதில்லை.மூதறிஞர் ராஜாஜி... உடல் நிலை மோசமாகி... சென்னை அரசினர் பொதுமருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது அவர் சொன்ன வார்த்தை கள்:""செத்துப் போவதற்காக என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்!''

கள்ளநோட்டிலும் காந்தியடிகள் கள்ளமில்லாது சிரிப்பதைக் காணும் போது தாங்கள் என்ன நினைப்பீர்கள்?

இந்த நோட்டில் சிரிப்பாவது கள்ளமில்லாமல் இருக்கட்டுமே என்று நினைக்கிறாரோ... என்று நினைக்கத் தோன்றும்

சரியாக வாழும் முறையினை எங்கே, யாரிடம் இலவசமாகக் கற்கலாம்?

அதற்குத் தகுந்த மாதிரி ஒரு பள்ளிக்கூடம் உண்டு. அங்கே ஓர் ஆசிரியரும் உண்டு.


பள்ளிக்கூடத்தின் பெயர்: உலகம்.
ஆசிரியரின் பெயர்: அனுபவம்.

உழைப்பு, நேர்மை எல்லாம் இருந்தும் சிலரால் வாழ்க்கையில் எழும்பிவர முடியவில்லையே என்ன காரணம்?

வாய்ப்புகள் வருகிறபோது அவற்றை அடையாளம் காண முடியாமல் போவதுதான் அதற்குக் காரணம். விழிப்போடு இருங்கள். வெற்றி நிச்சயம்!

சண்டை போடும் மனைவிமார்களை சமாளிப்பது எப்படி?

அதற்கு சாமர்த்தியம் தேவை.


ஒரு ரயில் பயணம். கணவன் மனைவியிடம் கேட்டார்.

""அன்பே! அந்த இடம் உனக்கு வசதியாக இருக்கிறதா?''
""ஆமாம்!''
""அதிகமாக ஆட்டம்... குலுக்கல் ஏதுமில்லையே?''
""இல்லை!''
""ஜன்னல் வழியே வரும் எதிர்காற்று தொந்தரவு ஏதும்
கொடுக்கவில்லையே!''
""இல்லை! சுகமாய் இருக்கிறது!''
""ஓ... நல்லது... அப்போ... நீ இங்கே வா...! நான் அங்கே உக்காந்துக்கிறேன்!''

காதல் வரவேண்டிய இடத்தில் மோதல் வருவது ஏன்?

கண்களின் மோதல் தானே காதலுக்கு ஆரம்பம்?
ஆகவேமோதலில் தொடங்கி காதலில் முடிவது வரவேற்கத் தக்கது. காதலில் தொடங்கி மோதலில் முடிவது வருந்தத்தக்கது.

ஒரு மனிதன் முழுத் திருப்தி அடைவது சாப்பாட்டில் தானே?

வயிறு நிறைவது "திருப்தி' அல்ல. மனம் நிறைவதுதான் "திருப்தி.'அதனால் தான் தமிழில் அதை "மனநிறைவு' என்கிறோம். என்றாலும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... சாப்பாட்டு விஷயத்தில் "திருப்தி' காண்பது சரியல்ல. ஏன் தெரியுமா? அடியிற் கண்ட வரிகளைக் கொஞ்சம் அசை போடுங்கள்.""நீங்கள் சாப்பிடுவதில் பாதி உணவு உங்களை வாழ வைக்கிறது! பாதி உணவு டாக்டர்களை வாழ வைக்கிறது!''

Friday, September 18, 2009

உண்மை காதல்..


என்னால் முடிந்தவரை
முயன்றுவிட்டேன் விலக
ஆனால் உன் நினைவுகள்
எப்போதும் என் நினைவிலே
என் இதயத்திலே...


காதலில் உண்மையை
தேடினேன் இன்றுவரை
மிஞ்சியது ஏமாற்றம் தான்
நீ என் வாழ்வில் வந்த
வசந்தமென்று நினைத்தேன்
எத்தனை முட்டாள் நான்!!!!!


என்னை காதலிப்பதாக
சொன்னது உன் அளவிடமுடியாத
பொய்களில் இதுவும் ஒன்று
என்பதை நான் உணரும் முன்
காலம் கடந்துவிட்டது!!
வலிக்கிறது !! நீ
விளையாட என் இதயம்தானா கிடைத்தது?


இன்னும் தெரியவில்லை !
தவறு எங்கே என்று???
காதல் என்பது எல்லாருக்கும்
கிடைக்ககூடிய வரம் இல்லையா?
இன்னும் எத்தனை தவம் செய்ய
உண்மை காதலை நான் பெற...

Thursday, September 17, 2009

காதல் யுத்தம்


உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!

உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
 
உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!

மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!

மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!

ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.

ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!!